டெல்லி ஜந்தர் மந்தரில் பாதுகாப்புப் பணியில் போலீசார்

 
இந்தியா

ஜூலை 20 போராட்டத்தில் 130 காவலர்கள், 65 மாணவர்கள் காயம்: டெல்லி காவல் துறை தகவல்

மோகன் கணபதி

புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய பேரணியின்போது ஏற்பட்ட மோதலில் காவல் துறையை சார்ந்த 130 பேரும், போராட்டக்காரர்கள் தரப்பில் 65 பேரும் காயமடைந்ததாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20 போராட்டத்தில் நிகழ்ந்த மோதல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், டெல்லி போலீஸ் தரப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி காவல் துறை தரப்பில் வெளியிட்ட தகவல்கள்: ஜூலை 20 அன்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் பதற்றம் அதிகரித்தது. இதனால் தடுப்புகள் அமைக்கப்பட்டன. காவலர்கள் கண்ணீர்புகை மற்றும் தடியடி மூலம் நடவடிக்கை எடுத்தனர்.

இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். காவல்துறை தரப்பில் 130 பேரும், போராட்டக்காரர்கள் தரப்பில் 65 பேரும் காயமடைந்தனர்.

ஜந்தர் மந்தர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சராசரியாக 10 ஆயிரம் பேர் கூடுகின்றனர். அங்கு சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க சுமார் 3 ஆயிரம் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டறிய டெல்லி காவல்துறை முக அங்கீகார அமைப்பு கேமராக்களை (FRS) பயன்படுத்தி வருகிறது.

FRS கேமராக்களின் உதவியுடன் ஜந்தர் மந்தருக்கு வரும் சமூக விரோத சக்திகளை டெல்லி காவல்துறை அடையாளம் கண்டு வருகிறது. இதுவரை குற்றப் பின்னணி கொண்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஜந்தர் மந்தருக்கு வந்திருப்பதை காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT