புதுடெல்லி: டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மிஅரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து, புதிய கொள்கை ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைய இருந்தது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ரோஸ் அவின்யூ நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரின் நீதிமன்ற காவலையும் நீட்டித்து நேற்று உத்தரவிட்டது. இதன்படி, சிபிஐ வழக்கில் ஆகஸ்ட் 9-ம் தேதி வரையிலும் அமலாக்கத் துறை வழக்கில் ஆகஸ்ட் 13-ம் தேதி வரையிலும் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.