அகமதாபாத்: திருமணத்தின்போது பெண்ணின் வயதை குறைத்து கூறி ஏமாற்றிவிட்டதாக, குஜராத்தில் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பெண் வீட்டார் 8 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சர்கேஜ் (34). இவர் தனது திருமணத்துக்காக கடந்தாண்டு பெண் பார்த்தார். மணப் பெண்ணின் பயோ டேட்டாவில் பிறந்த தேதி மே 18, 1991 என குறிப்பிடப்பட்டிருந்தது. தன்னைவிட ஒன்றரை வயது குறைவான பெண் என்பதால், அவர் திருமணத்துக்கு சம்மதித்தார்.
பரிசோதனை: திருமணம் முடிந்து ஓராண்டு ஆகியும், அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் மருத்துவ பரிசோதனைக்காக தனது மனைவியை ஒரு மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். சோனோகிராபி பரிசோதனை செய்த மருத்துவர், பெண்ணுக்கு 40 முதல் 42 வயது இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதால், அவரால்இயற்கையாக கருத்தரிப்பதற்கான வாய்ப்பு குறைவு என கூறியுள்ளார்.
அதன்பின் தனது மனைவிஇடம் வயது குறித்த ஒரிஜினல் கல்வி சான்றிதழை வாங்கி ஆய்வு செய்தபோதுதான், அதில் பெண்ணின் பிறந்த ஆண்டை 1985 என்பதற்கு பதில் 1991 என அவரது குடும்பத்தினர் மாற்றம் செய்திருப்பதை சர்கேஜ் கண்டு பிடித்தார்.
இதனால் அவர் வேஜல்பூர் காவல் நிலையத்தில் மனைவி மற்றும் மனைவி குடும்பத்தார் மீது மோசடி புகார் அளித்தார். இதையடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மீது போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.