புதுடெல்லி: வேளாண் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் போராட்டம் தொடங்க உள்ளதாக விவசாயிகள் அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அறிவித்துள்ளது.
கடந்த 2020-21-ல் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை எஸ்கேஎம் தலைமையேற்று நடத்தியது. இதன் பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் எஸ்கேஎம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2021 டிசம்பர் 9-ம் தேதிஎங்கள் அமைப்புடன் மத்திய அரசுசெய்துகொண்ட ஒப்பந்தப்படி வேளாண் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம்உள்ளிட்ட கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் போராட்டம் தொடங்க பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.க்களுக்கு கோரிக்கை: புதுப்பிக்கப்பட்ட எங்கள் கோரிக்கை பட்டியலை ஆகஸ்ட் 9-ம் தேதி அனைத்து எம்.பி.க்களிடமும் வழங்குவோம்.
‘வெள்ளையனே வெளியேறு’ தினத்தை ‘கார்ப்பரேட் நிறுவனங்களே வெளியேறு’ தினமாக கடைப்பிடித்து நாடு முழுவதும் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.