இந்தியா

ஹரியாணா அரசு பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவர்கள்: சிபிஐ விசாரணை தொடக்கம்

செய்திப்பிரிவு

சண்டிகர்: கடந்த 2016-ல் ஹரியாணா அரசுப்பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை மூலம் நிதி மோசடி செய்த விவகாரம் குறித்து சிபிஐ நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றம் கடந்த 2019 நவம்பரில் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தை அணுகிய சிபிஐ“விசாரணைக்கு பெரும் மனிதவளம் தேவைப்படும் என்பதால் விசாரணையை மாநில காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கோரியது.

ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்ததால் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிள்ளது.

ஹரியாணா அரசு பள்ளிகளில் கடந்த 2016-ல் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பயில்வதாக தரவுகள் தெரிவித்தன. உண்மையில் 18 லட்சம் மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிப்பதும் மீதமுள்ள எண்ணிக்கையான 4 லட்சம், போலி சேர்க்கை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

கல்வியை ஊக்குவிக்க ஏழைமற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலத்திட்டங்களுக்கு அரசுநிதி ஒதுக்கிறது. இந்த நிதியில் முறைகேடு செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து விஜிலன்ஸ் துறையின் பரிந்துரையின் பேரில் ஹரியாணாவில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT