இந்தியா

காலதாமதம் செய்தால் தீர்ப்பின் தேதியை அறிவிப்பேன்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி கண்டனம்

இரா.வினோத்

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் அரசுத் தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நால்வர் தரப்பு இறுதிவாதமும் ஏற்கெனவே முடிந்துவிட்டது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பாக ஜெய லலிதாவின் வழக்கறிஞர் பி.குமாரை இறுதி தொகுப்புரை வழங்குமாறு நீதிபதி டி'குன்ஹா கடந்த செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் புதன்கிழமை காலை 11.30 மணி வரை வழக்கறிஞர் பி.குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனிடையே நீதிமன்றத்துக்கு வந்த அவரது உதவியாளர் அசோகன், “எங்கள் வழக்கறிஞருக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தொடர்பான பணிகள் உள்ளன. அதனால் இன்று வரமுடியவில்லை. எனவே வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்க வேண்டும்'' என்றார்.

இதனால் கடும் கோபமடைந்த நீதிபதி டி'குன்ஹா, “18 ஆண்டு களுக்கு முன்பு தொடுக்கப்பட்ட இவ் வழக்கில் முதல்கட்ட விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல், வாக்கு மூலம் பதிவு செய்தல், குறுக்கு விசாரணை, குற்றம் சாட்டப் பட்டவர்களிடம் விளக்கம் பெறுதல், இறுதிவாதம் எல்லாம் முடிந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நால் வருக்கும் இறுதிவாதத்தின் போது 42 நாட்கள் காலஅவகாசம் கொடுத்தேன்.

தற்போது இவ்வழக்கில் இறுதி தொகுப்புரை வழங்காமல் தொடர்ந்து இழுத்தடிப்பது சரியல்ல.வழக்கை மேலும் தாமதம் செய்ய முயற்சித்தால் இறுதி தொகுப்பு வழங்கும் வாய்ப்பை மறுத்து தீர்ப்பின் தேதியை அறிவித்துவிடுவேன். மாலை 5 மணி வரை நான் நீதிமன்றத்தில் இருப்பேன். அதற்குள் இறுதி தொகுப்புரை வழங்கப்பட வேண்டும்” என்றார்.

இதையடுத்து நீதிபதி, அரசுத் தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து, “குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பிறகு வாதிடுவார்கள். நீங்கள் உங் களுடைய இறுதி தொகுப்புரையை வழங்குங்கள்'' என்றார்.

இதற்கு அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் எஸ்.மரடி, “அரசு வழக் கறிஞர் பவானி சிங் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வேறொரு வழக்கில் ஆஜராகியுள்ளார். மேலும் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர்களின் இறுதி தொகுப்புரை முடிந்த பிறகே அரசுத் தரப்பில் இறுதி தொகுப்புரை வழங்க வேண்டும்” என்றார். இதையடுத்து நீதிபதி டி'குன்ஹா வ‌ழக்கை பிற்பகல் 3 மணிக்கு ஒத்தி வைத்தார்.

வழக்கு பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வந்த போதும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை.அவருக்கு பதிலாக ஆஜரான வழக்கறிஞர் அசோகன், “கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. எனவே வழக்கை ஒத்தி வைக்க வேண்டும்'' என கோரினார்.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி டி'குன்ஹா, “வழக்கை வியாழக் கிழமைக்கு ஒத்தி வைக்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராகி இறுதி தொகுப்புரை வழங்க வேண்டும்.இல்லாவிடிவில் இறுதி தீர்ப்பின் தேதியை அறிவிப்பேன்” என்றார். இந்நிலையில் ஜெயலலிதா தரப்பில் வியாழக்கிழமை இறுதி தொகுப்புரை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT