பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிபிஐ புளூ கார்னர் நோட்டீஸ் விடுத்துள்ளது. கைதாகியுள்ள அவரது தந்தை ரேவண்ணாவை சிஐடி அதிகாரிகள் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
ஹாசன் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா(33) அதே தொகுதியில்பாஜக கூட்டணியின் சார்பில்மீண்டும் களமிறங்கியுள்ளார். கடந்தமாதம் 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர்பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இந்நிலையில் வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உள்ளிட்ட 3 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல்மீது 3 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவரது தந்தையும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா (66) மீதும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை ரேவண்ணாவை கைது செய்தனர். அவரது வீட்டில்இருந்து 2 செல்போன்கள், 2 மடிகணிணி, 6 பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் அவரை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது வீட்டு பணிப்பெண்ணுக்கு பாலியல்வன்கொடுமை செய்தது, பிற பெண்களுடனான தொடர்பு குறித்துவிசாரித்ததாக தெரிகிறது.
பிரஜ்வலுக்கு சிபிஐ நோட்டீஸ்: இதனிடையே தலைமறைவாகியுள்ள பிரஜ்வலை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் அவரை கைதுசெய்ய உதவி செய்யுமாறு சிபிஐ இயக்குநரகத்தின் உதவியையும் போலீஸார் கோரியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சிபிஐ இயக்குநரகம், பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய உதவுமாறு சர்வதேச போலீஸாருக்கு (இன்டர்போல்) இ-மெயில் அனுப்பியுள்ளனர். மேலும் பிரஜ்வலுக்கு நாடுகளுக்கு இடையேயான எல்லையை கடப் பதை தடுக்க புளூ கார்னர் நோட்டீஸும் விடுத்துள்ளனர்.
உதவி மையம் அமைப்பு: இதனிடையே ரேவண்ணா குடும்பத்தார் ஹாசன் மாவட்டத்தில் அதிகாரம் மிகுந்த குடும்பமாக இருப்பதால் அவர்களுக்கு எதிராகபுகார் அளிக்க பெண்கள் தயங்குவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, ரேவண்ணா, பிரஜ்வல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஹாசனில் சிறப்பு உதவி மையத்தை அமைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 6360938947 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என அந்த குழுவின் தலைவர் பி.கே.சிங் தெரிவித்துள்ளார்.