மணீஷ் சிசோடியா 
இந்தியா

உடல்நலம் குன்றிய மனைவியை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்றம் அனுமதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உடல்நலம் குன்றிய தனது மனைவியை சந்திக்க ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் மணீஷ் சிசோடியா, நீண்ட நாட்களாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அமைப்புகளின் காவலின் கீழ் உள்ள மணீஷ் சிசோடியா, உடல்நிலை சரியில்லாத தனது மனைவியை வாரம் ஒரு முறை சந்திக்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும், மணீஷ் சிசோடியா தாக்கல் செய்துள்ள ஜாமீன்மனு தொடர்பாக அமலாக்கத் துறைமற்றும் சிபிஐ அமைப்புகள் தங்களது கருத்துகளை தெரிவிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து, இந்த வழக்கை வரும் 8-ம் தேதிவிசாரணைக்கு பட்டியலிட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா உத்தரவிட்டார். மணீஷ் சிசோடியாவின் மனைவிசீமா, நரம்பு மண்டலம் தொடர்பான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, பணமோசடி வழக்கில் சிசோடியா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி தள்ளுபடி செய்தது.

விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு இந்த அனுமதியினை வழங்கி யுள்ளது.

SCROLL FOR NEXT