இந்திய கடற்படையினர் மற்றும் மீட்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் 
இந்தியா

செங்கடலில் ஹவுதி தீவிரவாதிகள் தாக்கிய எண்ணெய் கப்பலை மீட்டது இந்திய கடற்படை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காசா மீதான இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், செங்கடல் வழியாக செல்லும் வணிகக் கப்பல்களைக் குறி வைத்து ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் செங்கடல் வழியாக ரஷ்யாவில் இருந்து இந்தியா நோக்கி வந்த எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

ஆண்ட்ரோமெடா ஸ்டார் என்ற பெயருடைய இந்தக் கப்பல் ரஷ்யாவின் பிரிமோர்ஸ்க் பகுதியிலிருந்து புறப்பட்டது. செங்கடல் பகுதியில் இந்த எண்ணெய்க் கப்பல் வந்த போது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஹவுதி படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தக் கப்பல் மோசமாக சேதமடைந்தது.

இந்நிலையில் எண்ணெய்க் கப்பலை மீட்க இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் கொச்சி புறப்பட்டுச் சென்றது. அந்தக் கப்பலை கடற்படை கப்பல் நேற்று முன்தினம் மீட்டது. மேலும் அதிலிருந்து 30 கப்பல் ஊழியர்களையும் இந்திய கடற்படையினர் காப்பாற்றினர். இதில் 22 பேர் இந்தியர்கள் ஆவர்.

இதுதொடர்பாக கடற்படை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதலில் தாக்கப்பட்ட கப்பலின் நிலையை அறிய ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தோம். இதைத் தொடர்ந்து கப்பலில் வெடிகுண்டுகள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் நிபுணர் குழு சென்று சோதனையை நடத்தியது.

பின்னர் அந்தக் கப்பலை மீட்டு ஊழியர்களை பத்திரமாக வெளியே கொண்டு வந்தோம். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து அந்தக் கப்பல் பாதுகாப்புடன் குஜராத்தில் உள்ள வாதினார் பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்திய கடற்படை விரைந்து செயல்படுவதால் இப்பகுதியில் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் கடற்படையானது அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

          
SCROLL FOR NEXT