மல்லிகார்ஜுன கார்கே 
இந்தியா

“அரசியலமைப்பு, ஜனநாயக பாதுகாப்புப் போராட்டம் இன்று தொடக்கம்” - கார்கே கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: “நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் இன்று தொடங்குகிறது” என முதல்கட்ட மக்களவைத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் இன்று தொடங்குகிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தலில் வாக்களிக்கும் எனது அன்பான குடிமக்களே நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன்.

பொருளாதாரத்துக்கு அதிகாரமளித்தல் மற்றும் சம வாய்ப்புகளை வழங்கக்கூடிய புதிய சகாப்தம் உங்களை அழைக்கிறது. கடந்த 10 ஆண்டுகால வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு முடிவு கட்டும் விதமாக, யுவ நீதி (YUVA NYAY) மூலம் வேலைப் புரட்சிக்கு வித்திட வாக்களியுங்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறோம் எனக் கூறி ஏமாற்றுபவர்களை விட்டுவிட்டு, கிசான் நியாவுக்கு (KISAAN NYAY) நமது விவசாயிகள் வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்த தேசத்தை கட்டமைக்கும் கோடிக்கணக்கான கடின உழைப்பாளிகள், தங்கள் ஊதியத்தை குறைத்து கரோனா காலத்தில் தங்களை நெடுஞ்சாலைகளில் பல கிலோமீட்டர்கள் நடக்க விட்டவர்களுக்கு பதிலாக, ஷ்ராமிக் நியாயாவின் (SHRAMIK NYAY) அஜெண்டாவுக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

சர்வாதிகாரத்தின் மூலம் நமது நிறுவனங்கள் சிதைக்கப்பட வேண்டுமா? அல்லது ஜனநாயகத்தைப் பாதுகாக்க விரும்புகிறீர்களா? ஒரு வினாடி இடைநிறுத்தி, சிந்தித்துப் பாருங்கள். இந்தியாவின் தலைவிதியை வாக்காளர்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் அதிக அளவில் சென்று வாக்களிக்க வேண்டும்” என்று கார்கே குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT