‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் ரூ.7,100 கோடியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள 116 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
‘அம்ரித் பாரத்’ என்ற புதிய திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 1,309 ரயில் நிலையங்கள் படிப்படியாக மேம்படுத்தப்பட உள்ளன. இதில், தெற்கு ரயில்வேயில் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 25 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
2-வது கட்டமாக 44 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, மேம்பாட்டு பணிகளுக்கு கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. பல்வேறு நிலையங்களில் இப்பணி தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ளது. வரும் மாதங்களில் பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயில் கடந்த நிதி ஆண்டில் (2023-24) அம்ரித் பாரத் நிலையங்கள் தொடர்பான பணிகள் நன்கு முன்னேற்றம் அடைந்துள்ளன. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு ரூ.4,100 கோடி செலவிடப்பட உள்ளது.
தமிழகத்தில் 75, கேரளாவில் 35, புதுச்சேரியில் 3, கர்நாடகாவில் 2, ஆந்திராவில் ஒரு ரயில் நிலையம் என தெற்கு ரயில்வேயில் மொத்தம் 116 நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை ரூ.7,100கோடியில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. பல ரயில் நிலையங்களில் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.