புதுடெல்லி: காங்கிரஸின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று (வியாழக்கிழமை) மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதுவரை மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்த சோனியா காந்தி, முதல் முறையாக ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 91 வயதாகும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்-ன் பதவிக் காலம் நேற்றுடன் (ஏப்.3) முடிவடைந்த நிலையில், அவரது இடத்தில் தேர்வான சோனியா காந்தி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
சோனியா காந்தி, மாநிலங்களவைத் தலைவர் பியூஸ் கோயல், காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் முன்னிலையில் பதவி ஏற்றார். அப்போது சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி உடன் இருந்தனர்.
ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவி ஏற்ற நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார். இவர்களுடன் பதவி ஏற்ற 14 பேருக்கும் துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.