பீமாவரம்: ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சியுடன் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இவர்களுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்துள்ளன.
இந்நிலையில், ராஜமுந்திரி, பீமாவரம், காக்கிநாடா, அமலாபுரம் பகுதிகளில் பிரச்சாரம் செய்ய பவன் கல்யாண் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஹெலிகாப்டரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆந்திர அரசிடம் அனுமதி கேட்டிருந்தார். இதற்கு சாலை மற்றும் கட்டிடத்துறை அதிகாரிகள் நேற்று அனுமதி மறுத்தனர். ஆதலால், பவன் கல்யாண் தனது சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய நேரிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விரைவில் உச்ச நீதிமன்றத்தை அணுகி முறையிட உள்ளதாக பவன் கல்யாண் கூறி உள்ளார்.