இந்தியா

கேரளாவில் மகனைக் கொன்று எரித்த தாய்; கையில் இருந்த தீக்காயத்தை வைத்து கண்டுபிடித்த போலீஸ்

செய்திப்பிரிவு

கேரள மாநிலம் கொல்லத்தில் மகனை தாயே கொலை செய்து சடலத்தை எரித்த கோர சம்பவம் நடந்துள்ளது.

கொல்லத்தைச் சேர்ந்தவர் ஜோப்ஜான். இவரது மனைவி ஜெயா மோல். இவர்களுக்கு 14 வயதில் மகன் இருந்தார்.

கடந்த திங்கள்கிழமை இரவு முதல் மகன் ஜித்துவை காணவில்லை. உடனே பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீஸாரும் சிறுவனை பல இடங்களிலும் தேடியுள்ளனர்.

இந்நிலையில், சிறுவனின் தாய் ஜெயா மோல் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். மேலும் அவரது கையில் புதிய தீக்காயமும் இருந்துள்ளது. அந்தத் தீக்காயம் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஜெயா மோலின் வீட்டைச் சுற்றி போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டின் சுற்றுச்சுவர் அருகே சிறுவன் ஜித்துவின் செருப்பு கிடைத்தது.

வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என்று புகார் கொடுக்கப்பட்ட நிலையில், சிறுவனின் செருப்பு மட்டும் எப்படி வீட்டு சுற்றுச்சுவர் அருகே இருக்க முடியும் என போலீஸார் கேள்வி எழுப்பினர்.

ஜெயா மோலிடம் தீவிரமாக விசாரித்துள்ளனர். அப்போது அவர், தனது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின் சடலத்தை எரித்ததாக வாக்குமூலம் அளித்தார்.

முழு சம்பவத்தையும் அவர் போலீஸாரிடம் விவரித்தார்.

"மகனின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்தேன். பின் வீட்டு சுற்றுசுவர் அருகேயே சடலத்தை எரிக்க நினைத்தேன். அப்புறம், முடிவை மாற்றி அருகிலிருந்த ரப்பர் தோட்டத்திற்கு மகனின் சடலத்தை இழுத்துச் சென்றேன். அங்கு அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தேன்.

பாதி சடலமே எரிந்ததால் எனது அண்டை வீட்டுப் பெண்ணிடம் மண்ணெண்ணெய் கடனாகப் பெற்றுச் சென்று இரண்டாவது முறையாக சடலத்தை எரித்தேன்" என்று கூறினார்.

இவற்றையெல்லாம் விவரிக்கும்போது ஜெயா மோல் சற்றும் பதற்றமோ சலனமோ இல்லாமலேயே இருந்திருக்கிறார்.

இவர் மட்டுமே இந்த குற்றச்செயலை செய்தாரா இல்லை இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT