உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் அதிருப்தி தெரிவித்து பேட்டியளித்ததை தொடர்ந்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபாலை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 4 பேர் இன்று காலை திடீரென செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நான்கு மூத்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முக்கிய வழக்குகளை, குறிப்பிட்ட சில வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வதாக புகார் தெரிவித்தனர்.
மேலும், இதுதொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியாக கூறினர். அந்த கடிதத்தை பின்னர் அவர்கள் வெளியிட்டனர்.
இதன் பின், தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நீதிபதிகள ‘‘இதை நாட்டின் முடிவுக்கு விட்டு விடுகிறோம்’’ எனக்கூறினர்.
இதை தொடர்ந்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தீபக் மிஸ்ரா, அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபாலை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது நீதிபதிகளின் பேட்டி தொடர்பாகவும், அதனால் நீதித்துறையில் எழுந்துள்ள சலசலப்பு தொடர்பாகவும் விவாதித்தாகவும் தெரிகிறது. மேலும். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கருத்தையும் தலைமை நீதிபதி கேட்டு தெரிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.