எர்ணாகுளம்: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தங்கும் விடுதியின் பாதுகாப்புக் குறைபாட்டால், கேரள தம்பதியின் இரு மகன்கள் கடந்த 2020-ம் ஆண்டு நீரில் மூழ்கி இறந்தனர். இந்நிலையில், அந்தப் பெற்றோருக்கு இழப்பீடாக ரூ.1.99 கோடி வழங்க வேண்டும் என்று விடுதி நிர்வாகத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ், நுகர்வோர் வழக்கில் வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை இதுவாகும்.
கேரள தம்பதி பிவி பிரகாஷன் மற்றும் வன்ஜனா ஆகியோரின் மகன்கள் மிதுன் (30) மற்றும் நிதின் (24) இருவர் கடந்த 2020-ம்ஆண்டு அக்டோபர் மாதம், புனேயில் உள்ள வேளாண் சுற்றுலா சேவை வழங்கும் கரண்டி வேலி விடுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
“அந்த விடுதி, சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளை வழங்கும் என்று உறுதியளித்து இருந்தது. ஆனால், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதன் காரணமாகவே தங்கள் மகன்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்” என்ற கேரள தம்பதியினர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த ஆணையம், இரு மகன்களை இழந்த பெற்றோருக்கு இழப்பீடாக ரூ.1.99 கோடி வழங்க வேண்டும் என்று கரண்டி வேலி விடுதிக்கு உத்தரவிட்டுள்ளது. “மகன்களை இழந்த பெற்றோரின் வலியை எந்த இழப்பீடும் ஆற்றிவிடாது. எனினும், இந்த சம்பவத்துக்குக் காரணமான தரப்பு, தங்கள் தவறுக்கு இழப்பீடு வழங்கி அந்தப் பெற்றோரின் வருத்தத்தில் பங்கேற்பது அவசியம். எதிர்காலத்தில் இது போன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் இது உதவும்” என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.