புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தால் புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய பாஜக அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சட்டிவரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று பாஜக கூறியுள்ளது.
மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து புதன்கிழமை புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்துஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதேநேரத்தில், இந்த இருவருக்கும் ஆதரவாக நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே 2 பேர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். வண்ண புகையை வெளியேற்றும் குப்பிகளையும் வைத்திருந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதுதொடர்பாக 4 பேரை டெல்லி சிறப்பு போலீஸார் கைது செய்தனர். மக்களவைக்குள் புகுந்தவர்கள் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா மற்றும் பெங்களூரு விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற மைசூருவை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் (35) என்ற இளைஞர்கள்.
இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே 2 பேர் கோஷமிட்டனர். இதில் ஹரியாணாவை சேர்ந்த நீலம் (42) என்ற பெண், சிவில் சர்வீஸ் நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வருகிறார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளார். ஆனால், அரசியல் கட்சிகளுடன் இவருக்கு தொடர்பில்லை என தெரியவந்துள்ளது. இன்னொருவர் அமோல் ஷிண்டே(25). இவர்களையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று பாஜக தெரிவித்துள்ளது. இதுகுறித்த பாஜக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் பழைய வீடியோ ஒன்றை வெளியிட்ட, “அதிகார மாற்றம் அல்லது ஆட்சி மாற்றம் என்பது எதிர்க்கட்சித் தலைவர்கள் அடிக்கடி பயன்படுத்தி வரும் பதங்கள். நாடாளுமன்றத்தில் அத்துமீறலில் ஈடுபட்டு கைதானவர்களில் ஒருவரான நீலம் ஆசாதை சந்தியுங்கள். அவர் ஒரு தீவிர காங்கிரஸ் இண்டியா கூட்டணி ஆதரவாளர். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றிருக்கும் இவர் ஒரு கிளர்ச்சியாளர்.
இப்போது கேள்வி என்னவென்றால் யார் இவர்களை அனுப்பியது? அவர்கள் ஏன் மைசூரில் இருந்து ஒருவரைத் தேர்த்ந்தெடுத்து பாஜக எம்பியிடம் இருந்து நாடாளுமன்றம் செல்லும் பாஸ் பெறவேண்டும். அஜ்மல் கசாப்பும் மக்களை குழப்புவதற்காக கலவா அணிந்திருந்தார். இதுவும் அதுபோன்ற தந்திரம் தான். எதிர்க்கட்சிகளால் எதுதையும் நிறுத்த முடியாது. ஜனநாயகத்தின் உயரிய அமைப்பான நாடாளுமன்றம் களங்கப்படுத்தப்பட போதும் கூட" என்று தெரிவித்துள்ளார்.
மனோரஞ்சன் காங்கிரஸ் அல்லது எஸ்எஃப்ஐ இயக்க ஆதரவாளரா? அவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டாரா? இதன் அடிநாதம் இன்னும் தெரியவில்லை. ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. டிச.13ம் தேதி ஏதோ ஒரு நோக்கத்துடன் நாடாளுமன்றத்தைக் களங்கப்படுத்தியுள்ளன என்ற பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே கர்நாடாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லாவண்யா பல்லால் ஜெயின் அமித் மாளவியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், “அவர் பிரச்சினையை திசைதிருப்ப தீவிரமாக முயற்சித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் அத்துமீறியவர்கள் முஸ்லிம்களாக இருந்திருந்தால் கற்பனை செய்துபாருங்கள். பாஸ்கள் வழங்கியது காங்கிரஸ் எம்.பி.,யாக இருந்திருந்தால் கற்பனை செய்து பாருங்கள். இப்போது மோடி கோபக்கனல் கக்கியிருப்பார். அமித் ஷா நேருவை குற்றம் சாட்டியிருப்பார். பிரச்சாரர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் ராகுல் காந்தியை குற்றம் சாட்டியிருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.