எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இந்தியா - பாகிஸ்தான் இடையே அண்மையில் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், பிடிஐ செய்தியாளரிடம் நேற்று கூறியதாவது:
பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நஸீர் கான் ஜன்ஜுவாவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அண்மையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையானது தாய்லாந்தில் மூன்று வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.
தெற்காசிய பிராந்தியத்திலிருந்து தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்தும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்தும் இரு நாட்டு பிரதிநிதிகளும் விவாதித்தனர். தீவிரவாதத்தை ஒழிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை என்று கூறியிருந்தது உண்மைதான். அதேசமயத்தில், முக்கிய விவகாரமான தீவிரவாதம் தொடர்பான பேச்சுவார்த்தையையே முன்னெடுக்காமல் இருக்க முடியாது. இவ்வாறு ரவீஷ் குமார் தெரிவித்தார்.
பதான்கோட் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையை இந்தியா தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
- பிடிஐ