இந்தியா

சீக்கியர் கலவர வழக்கு: விசாரணையை கண்காணிக்க நீதிபதி தலைமையில் குழு- உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான 186 வழக்குகள் மீதான மறு விசாரணையை கண்காணிக்க, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.என்.திங்ரா தலைமையில் புதிய சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தது.

புதிய எஸ்ஐடி-யில் நீதிபதி திங்ரா தவிர, ஐபிஎஸ் அதிகாரி அபிஷேக் துலர் மற்றும் ஓய்வுபெற்ற ஐஜி ராஜ்தீப் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இக்குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கடந்த 1984-ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது மெய்க்காவலர்களால் (சீக்கியர்) சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தில் 3,000 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட 250 வழக்குகளில் 241 வழக்குகளை முடித்துக் கொள்ளுமாறு ஏற்கெனவே அமைக்கப்பட்ட எஸ்ஐடி பரிந்துரை செய்தது. இதை ஆராய உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவின் அறிக்கையை நேற்று முன்தினம் பரிசீலித்த நீதிபதிகள், விசாரணை நடத்தாமலேயே முடித்து வைக்க முடிவு செய்யப்பட்ட 186 வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT