'சிக்கிம் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதி எங்களுக்கே சொந்தம். சட்டபூர்வமாகவே நாங்கள் கட்டிடங்கள் கட்டுகிறோம்' என்று சீனா தெரிவித்து, மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சாலை அமைக்க முயற்சி
இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் எல்லையில், சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றது. இதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.
பதற்றம்
இதனால், ஏற்பட்ட சிறிய மோதலில் இரு தரப்பு நாட்டு ராணுவத்தினரும் படைகளைக் குவித்ததால், பதற்றம் ஏற்பட்டது. அதன் பின், இந்தியா, சீன தூதரக மட்டத்தில் நடந்த சுமுக பேச்சுக்கு பின், இரு நாடுகளும் தங்களின் படைகளை வாபஸ் பெற்றன.
மீண்டும் கட்டுமானம்
இந்நிலையில், டோக்லாம் எல்லையில் மீண்டும் மிகப்பெரிய கட்டுமான நடவடிக்கைகளை சீனா தொடங்கி இருக்கிறது. அங்கு நிரந்தரமாக படைகளை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களும் வெளியானது.
எங்களுக்கே சொந்தம்..
இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறுகையில், "நாங்களும் அந்த புகைப்படத்தையும் அது தொடர்பானவற்றையும் பார்த்தோம். இந்த புகைப்படங்களை யார் வழங்கியது எனத் தெரியாது. விரிவான தகவல்களும் எனக்கு கிடைக்கவில்லை. அதேசமயம், டோக்லாம் பகுதியில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. டோக்லாம் எப்போதுமே சீனாவுக்கே சொந்தம்" எனக் கூறியுள்ளார்.
இறையாண்மை நிலைநாட்டப்படும்..
டோக்லாம் சீனாவின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதை கூறிக்கொள்கிறோம். இதில் எந்தவிதமான பிரச்சினைக்கும் இடமில்லை. எங்களின் இறையான்மை நிலைநாட்டப்படும். எங்கள் படைகள் தங்குவதற்கும், மக்கள் வாழ்வதற்கும் இங்கு மிகப்பெரிய அளவில் கட்டிடங்கள் கட்டுகிறோம்'' என லூ காங் தெரிவித்தார்.
டோக்லாம் எல்லைப்பகுதியில் ஏற்கெனவே சர்ச்சை நீடித்து தற்போது பதற்றம் தணிந்துள்ள நிலையில், மீண்டும் இந்தியாவுடன் சச்சரவுகளை ஏற்படுத்த சீனா தயாராகி வருகிறது.