ஜார்கண்ட் மாநிலத்தின் ஹஜாரிபாக் வனப் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் காடுகளில் துணை ராணுவப் படையினருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மாவோயிஸ்ட்டுகள் மீதான தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
நேற்று(வியாழன்) இரவு 11.23 மணியளவில் மாவோயிஸ்டுகளுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பீ.எப்.) மற்றும் ஜார்கண்ட் போலிஸ் '22 படாலியன்' படைப்பிவைச் சேர்ந்த துணை ராணுவப்படையினர் இணைந்த கூட்டுக் குழுவினருக்கும் இடையே இந்த சண்டை நடைபெற்றது.
இதுகுறித்து மத்திய ரிசர்வ் காவல் படையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எம்.தினகரன் ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்ததாவது:
சிபிஆர்எப் படையினரும் பாதுகாப்புப் படையினரும், டோனாய் குர்டுவின் அடர்ந்த காடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்ட்டுகள்தான் முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தாக்கத் தொடங்கினர்.
தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட இடத்தில், இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஒரு ஏகே-47 துப்பாக்கியும், இன்சாஸ் ரக துப்பாக்கியும் மற்றும் 200 பயன்படுத்தப்படாத தோட்டாக்களையும் மத்திய ரிசர்வ் படை போலீஸ் படை கைப்பற்றியது. தேடுதல் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.
இதே போன்ற நடவடிக்கைகள் சத்தீஸ்கரில் உள்ள பிட்மெலின், பொள்ளம்பள்ளி, சுக்மா காடுகளிலும் நடத்தப்பட்டன. அதில் சுக்மா வனப்பகுதிகளில் நடந்த தேடுதல் நடவடிக்கையில் சி.ஆர்.பீ.எஃப் காவலர் ஒருவர் காயமுற்றார்.
காயம்பட்ட காவலர் அங்கிருந்து பத்திரமாக ஹெலிகாப்டர் மூலமாக கொண்டுவரப்பட்டு ராய்ப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீரடைந்துவருகிறது'' என்றார்.