கோப்புப்படம் 
இந்தியா

நாளை மறுநாள் நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: தமிழக, கர்நாடக அதிகாரிகள் பங்கேற்பு

இரா.வினோத்

புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் அடுத்த கூட்ட‌ம் நாளை மறுதினம் (நவம்பர் 3-ம் தேதி) டெல்லியில் நடைபெறுகிறது.

நேற்று முன் தினம் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு நவம்பர் 15-ம் தேதி வரை விநாடிக்கு 2600 கன அடி நீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் தமிழகத் துக்கு காவிரி நீர் திறந்து விட முடியாதென்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறினார். இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் அதன் தலைவர்எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நாளை மறுதினம் 3-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அதிகாரிகளுக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் 13000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்த இருப்பதாக தெரிகிறது.

கர்நாடக அரசு தரப்பில்அணைகளின் நீர் இருப்பு நிலவரத்தை எடுத்துரைத்து அதனை மறுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல மேகேதாட்டுஅணை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT