இந்தியா

பிரதமர் கருத்துக்கு கண்டனம்: கர்நாடகா பாஜக அலுவலகம் முன்னர் பக்கோடா கடை போட்ட இளைஞர்கள்

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கர்நாடகாவில் பாஜக அலுவலகம் முன்னர் இளைஞர்கள் சிலர் பக்கோடா கடை போட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அண்மையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடியிடம், ஒவோர் ஆண்டும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கடந்த 2013-ல் கொடுத்த வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "பக்கோடா விற்று நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பாதிப்பவர்கூட வேலைவாய்ப்பை பெற்றவர்தானே" என பதிலளித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'கர்நாடகா ஃபார் எம்ப்ளாய்மென்ட்' (Karnataka for Employment) என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் பாஜக அலுவலகம் முன்னர் பக்கோடா கடை போட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அவர்கள் அனைவரும் நீல நிறையில் உடை அணிந்திருந்தனர்.

இந்த அமைப்பானது, வேலையில்லை என்றால் வாக்கு இல்லை என்ற கொள்கையோடு செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த அமைப்பின் தலைவர் முட்டுராஜ் கூறும்போது, "தெருவோரங்களில் கடைகள் நடத்தி பிழைப்பவர்கள் பிரதமர் மோடி இழிவு படுத்தியிருக்கிறார். நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும். வரும் பிப்ரவரி 4-ம் தேதி, பிரதமர் மோடி கர்நாடகா வரும்போது அவரிடம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் குறித்து மனுவை அளிக்கவுள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT