பெங்களூரு: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. பாஜக.வுடன் கூட்டணி வைத்ததால் மஜதவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்.எம்.நபி,கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மஜத மாநில துணைத் தலைவர் சையத் சஃபி ஃபுல்லா சையத், முன்னாள் டெல்லி பொறுப்பாளர் முகமது அல்தாஃப், முன்னாள் சிறுபான்மை பிரிவு தலைவர் நசீர் ஹுசைன், முன்னாள் இளைஞர் அணி தலைவர் என்.எம். நூர் ஆகியோர் மஜதவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் மஜத மாநில தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சி.எம். இப்ராஹிம்கூறும்போது, ‘‘பாஜகவுடன்கூட்டணி வைத்தது தொடர்பாக எனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து, வரும் 16ம் தேதி எனது முடிவை அறிவிப்பேன்''என்றார்.
இதனால் தேவகவுடாவும், அவரது மகன் குமாரசாமியும் முஸ்லிம் தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர். அதேவேளையில், பாஜகவுடன் கூட்டணியால் மஜதவுக்கு கிடைத்த முஸ்லிம் வாக்குகள் கேள்விக்குறியாகி உள்ளது.மண்டியா, சென்னப்பட்டனா ஆகிய பகுதிகளில் முஸ்லிம் வாக்குகளால்தான் மஜத கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.