அயோத்தியில் ராமர் கோயில் மட்டுமே கட்டப்பட வேண்டும், அங்கு புதிய மசூதி எதையும் கட்டுவதை அனுமதிக்க முடியாது என விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய நிர்வாக அறங்காவலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் செயல் தலைவர் பிரவீண் தொகாடியா கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது நமது கோரிக்கை. இந்த விருப்பும் 450 ஆண்டுகள் நிறைவேறாமல் இருந்ததற்கு மொகலாயர்களின் ஆட்சி காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேசமயம், நாடு சுதந்திரமடைந்த பிறகும், ராமர் கோயில் கட்ட முடியாத நிலை ஏன் என்பதுதான் நமது கேள்வி.
அயோத்தியில் உடனடியாக ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதுதான் இந்துக்களின் கோரிக்கை. இதற்கான தடைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் மட்டுமே கட்டப்பட வேண்டும். அந்த பகுதியில் புதிதாக மசூதி கட்டுவதை ஏற்க முடியாது" எனக் கூறினார்.