பிரதமர் மோடி 
இந்தியா

மகளிர் மசோதா நிறைவேறியது நாடாளுமன்ற வரலாற்றில் பொன்னான தருணம்: மக்களவையில் பிரதமர் மோடி பெருமிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது நாடாளுமன்ற வரலாற்றில் பொன்னான தருணம் என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இந்நிலையில், 4-வது நாளாக மக்களவை நேற்று கூடியதும் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறுவதற்கு அனைத்து கட்சிகளைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் முழு மனதுடன் ஆதரவளித்துள்ளனர். இதற்காக, இந்த அவையின் தலைவர் என்ற முறையில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மசோதா நிறைவேறி இருப்பது நம்முடைய நாடாளுமன்ற வரலாற்றில் பொன்னான தருணம் ஆகும். இந்த மசோதா நாட்டில் உள்ள பெண் சக்தியை ஊக்குவிக்கும். அத்துடன் அவர்களால் கூடுதல் பொறுப்பை ஏற்கவும் முடியும்.

மிகவும் முக்கியமான இந்த மசோதாவை நிறைவேற்றிய பெருமை அவையின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அவைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சாரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

          
SCROLL FOR NEXT