புதுடெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கனடாவில் பிரிவினைவாதிகளின் இந்தியாவுக்கு எதிரான செயல்கள் தொடர்வது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் பிரதமர் மோடி மிகுந்த கவலை தெரிவித்தார். கனடாவில் உள்ள பிரிவினைவாதிகள், பிரிவினைவாதத்தை ஊக்குவித்தல், இந்திய தூதர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுதல், தூதரக வளாகங்களை சேதப்படுத்துதல், இந்திய சமூகத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திட்டமிடப்பட்ட குற்றங்கள், போதைப் பொருள் மற்றும் ஆட்கடத்தல் கும்பலுடன் இத்தகைய சக்திகளுக்கு உள்ள தொடர்பு கனடாவுக்கும் கவலை அளிக்கும் விஷயமாகும்.
இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் ஒத்துழைப்பது அவசியம். இந்தியா – கனடா உறவுகளின் வளர்ச்சிக்கு பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான உறவுகள் அவசியம் என பிரதமர் மோடி இந்த சந்திப்பில் வலியுறுத்தினார்.
இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கிடையில் கனடா பிரதமரின் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவரது புறப்பாடு தள்ளிவைக்கப்பட்டது. ஜஸ்டின் ட்ரூடோ டெல்லியில் இருந்து இன்று புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.