மோகன் பாகவத் | கோப்புப் படம். 
இந்தியா

சமூகப் பாகுபாடுகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடு அவசியம்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

செய்திப்பிரிவு

நாக்பூர்: சமூகத்தில் பாகுபாடுகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடு அவசியம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பாகவத், "சமூகத்தில் பாகுபாடுகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடு அவசியம். ஆர்எஸ்எஸ் அமைப்பானது அரசியல் சாசனம் பரிந்துரைத்துள்ள இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறது.

நாம் நம் சக மனிதர்களை சமூக கட்டமைப்பில் பின்னுக்குத் தள்ளிவைத்திருந்தோம். அவர்கள் மீது நாம் அக்கறை காட்டவில்லை. இது 2000 ஆண்டுகள் தொடர்ந்தது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை நல்கும்வரை சில சிறப்புத் தீர்வுகள் தேவைப்படுகின்றன. அத்தகைய ஒரு தீர்வுதான் இட ஒதுக்கீடு. எனவே இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் பாகுபாடுகள் நிலவும்வரை தொடர வேண்டும், ஆர் எஸ் எஸ் அதற்கு முழு ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்கும்.

ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட சில பிரிவுகள் 2000 ஆண்டுகளாக அடக்குமுறையை அனுபவித்தபோது அப்படியான பாகுபாட்டை அனுபவிக்காதவர்கள் ஏன் வெறும் 200 ஆண்டுகளுக்கு சில தொந்தரவுகளைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது? அந்தவகையில், அனைத்து சமூகங்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும்வரை இட ஒதுக்கீடு அவசியமானதுதான்" என்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டங்களை முன்னெடுத்துவரும் சூழலில் இட ஒதுக்கீடு குறித்த மோகன் பாகவத்தின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

நிகழ்சியில் மாணவர் ஒருவர் அகண்ட பாரதம் பற்றி கேள்வி எழுப்ப அதற்குப் பதிலளித்த அவர், "இப்போதுள்ள இளைஞர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும்போது அகண்ட பாரதம் சாத்தியமாகும். 1947-ல் இந்தியாவில் இருந்து பிரிந்தவர்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள் என்றார்.

SCROLL FOR NEXT