இந்தியா

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான தங்க புஷ்பங்கள் காணிக்கை

செய்திப்பிரிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று ரூ. 2 கோடி மதிப்பிலான தங்க புஷ்பங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன.

திருப்பதி ஏழுமலையானுக்கு அரசர் காலம் முதலே தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம், மரகதம் என விலை மதிக்கமுடியாத அளவிற்கு நகைகளும், விலை உயர்ந்த கற்களும் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டு வருகின்றன.

விஜயநகர பேரரசரான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் கூட,சுவாமிக்கு 3 முறை கனகாபிஷேகம் (தங்க நாணயங்களால் அபிஷேகம்) செய்ததாக கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளன. பல்வேறு அரசர்கள், ஜமீன்கள், பீடாதிபதிகள், மடாதிபதிகள், அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் சுவாமிக்கு நகைகளை காணிக்கையாக வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், கடப்பாவை சேர்ந்த ராஜாரெட்டி எனும் பக்தர் ரூ.2 கோடி செலவில் 108 தங்க புஷ்பங்களை சுவாமிக்கு காணிக்கையாக நேற்று வழங்கினார்.

இதனை லலிதா ஜுவல்லரி நிறுவனத்தார் தயார் செய்ததால், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கிரண்குமாரும் உடன் வந்து தேவஸ்தான அதிகாரிகளிடம் தங்க புஷ்பங்களை சமர்பித்தனர்.

இந்த புஷ்பங்கள் அஷ்ட தள பாத பத்மாராதனை பூஜையில் உபயோகிகப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT