இந்தியா

செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் - மத்திய அமைச்சர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: செப்டம்பர் 18 -ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவர பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு அவை பல நாட்களாக ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றம் கூட்டம் தொடங்கிய
நாள் முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் 2 அவைகளையுமே ஸ்தம்பிக்க செய்தன.

மக்களவையின் அமளிக்கு மத்தியிலும் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை, 39 மணி நேரம் இயங்கியதாகவும், தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, டெல்லி நிர்வாக மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார்.

பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பும் நடைபெற்றது. இதில் மத்திய அரசு வெற்றி பெற்றது. ஆகஸ்ட் 11-ல் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு திடீரென நேற்று அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது: செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் மொத்தம் 5 அமர்வுகள் நடைபெறும். ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் நடைபெறும். இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT