இந்தியா

நாகாலாந்தில் 2 பொறியாளர்கள் கடத்தல்: போடோலாந்து தீவிரவாதிகள் கைவரிசை

என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 2 பொறியாளர்களை நாகாலாந்து போடோ தீவிரவாத அமைப்பு கடத்தியுள்ளது. அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆந்திர அரசு, நாகாலாந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த பிரதீஷ் சந்திரா, ரகு ஆகிய இரு பொறியாளர்கள், நாகாலாந்தில் உள்ள விருத்வா கன்ஸ்டிரக்‌ஷன்ஸ் எனும் நிறுவனத்தில் கண்காணிப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள், கடந்த 27-ம் தேதி, விஜயவாடாவுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். இவர்களுடன் மேலும் ஒருவரும் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், இவர்கள் வழியில் திடீரென கடத்தப்பட்டனர். இதில், ஒருவர் தப்பி வந்து, பிரதீஷ் சந்திரா, ரகு ஆகியோரின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்களை போடோலாந்து தீவிரவாதிகள் கடத்தியது தெரியவந்துள்ளது. ரூ. 20 லட்சம் வழங்கினால் மட்டுமே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

பொறியாளர்கள் கடத்தப்பட்டதை, அவர்களின் குடும்பத்தினர் ஆந்திர அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். ஆந்திர அரசு சார்பில், அதன் சிறப்பு பிரதிநிதி கம்பம்பாடி ராம்மோகன் ராவ், நாகாலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT