விஜயநகரம்: ஆந்திர அரசு பேருந்து 60 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 45 பயணிகளுடன் அரசு பேருந்து பாடேரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அல்லூரி மாவட்டத்தில் உள்ள பாடேரு மலைப்பாதையில் பேருந்துசென்று கொண்டிருந்தது.
சமீபத்தில் பெய்த கன மழையால் சற்று கீழ் நோக்கி சாய்ந்திருந்த மரக்கிளைகள் மீது படாமல் இருக்க பேருந்தை, ஓட்டுநர் சற்று இடது புறமாக திருப்பியபோது சாலை ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி சுமார் 60 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த சென்ற போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் விஜயநகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேரின்நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து பாடேரு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.