சமையல் எரிவாயு மானியம் பெரிய அளவுக்குச் சென்று கொண்டிருப்பதால் அந்தச் செலவினத்தைக் குறைக்க மத்திய அரசு மாற்று வழிகளைச் சிந்திக்கத் தொடங்கியுள்ளது.
எனவே, மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற வருவாய் உச்சவரம்பு விதிமுறையைக் கொண்டு வர மோடி அரசு பரிசீலனை செய்து வருகிறது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்து நாளிதழுக்கு இது பற்றி தெரிவிக்கும்போது, "ஏழை எளிய மக்களுக்கான மானிய விலை சிலிண்டர்களை மத்திய அரசு ஒருபோது நிறுத்தாது, மாறாக எந்தப் பிரிவினருக்கு மானிய விலை சிலிண்டர் அளிக்கப்பட வேண்டும் என்பது பற்றிய பொது விவாதம் வைக்கப்படும், அதன் பிறகு அதற்கான வரம்பு நிர்ணயிக்கப்படும்” என்றார்.
நடப்பு நிதியாண்டில், டீசல், எல்.பி.ஜி, மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் மீதான மானியம் ரூ.115,148 கோடியாக உள்ளது. இதில் சமையல் எரிவாயுவிற்கு மட்டுமான மானியம் ரூ.50,324 கோடியாக உள்ளது.