இந்தியா

சந்திரயான்-3 சுற்றுப்பாதை அடுத்த நிலைக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பிறகு பூமியை வலம்வந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரத்தை அதிகரித்து, ஆக. 1-ம்தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து சந்திரயான்-3 விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப்பாதை மாற்றப்பட்டது.

5 நாள் பயணத்துக்கு பிறகு ஆக.5-ம் தேதி நிலவின் வட்டச் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 நுழைந்தது. தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதை உயரத்தை படிப்படியாக சுருக்கி விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சந்திரயான் பயணப்பாதை 6-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. 2-வது கட்டமாக நேற்று மதியம் 1.30 மணிக்கு திரவ வாயு இயந்திரம் இயக்கப்பட்டு விண்கலத்தின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது. தற்போது குறைந்தபட்சம் 174 கி.மீ., அதிகபட்சம் 1,437 கி.மீ. தொலைவு கொண்ட நிலவு வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் வலம் வருகிறது.

SCROLL FOR NEXT