புதுடெல்லி: பெண் மற்றும் தனியாக வாழும் ஆண் அரசு ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்காக 730 நாள் விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: குடிமைப் பணி மற்றும் மத்திய அரசு தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள பெண் மற்றும் தனியாக வாழும் ஆண் அரசு ஊழியர்கள் குழந்தைகளை பராமரிப்பதற்காக அதிகபட்சமாக 730 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.
மத்திய குடிமைப் பணிகள் (விடுமுறை) விதிகள், (1972) 43-சி பிரிவின் கீழ் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. தங்கள் பணிக் காலத்தில் 2 குழந்தைகளை அவர்களின் 18 வயது வரை பராமரிப்பதற்காக இந்த விடுமுறையை பயன்படுத்திக் கொள்ளலாம். மாற்றுத் திறனாளி குழந்தையாக இருந்தால் வயது வரம்பு எதுவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.