வயோதிகத்தால் உடல் பலவீனமாகிவிட்டதால் யாருக்கும் சுமையாக இருக்க விரும்பாத 90 வயதை எட்டிய கணவன் மனைவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட வேதனை சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தின் ராமகுடு மண்டலத்தில் உள்ள வெங்கட்ராவ்பள்ளி கிராமத்தில் வேதிரா முத்தையா (95) அவரது மனைவி லட்சவா (90) வசித்துவந்தனர்.
சலவைத் தொழிலாளியான வேதிராவுக்கு 4 பிள்ளைகள். இவர்களில் இருவர் ஆண்; இருவர் பெண். பெண் குழந்தைகள் ஏற்கெனவே இறந்துவிட ஆண் வாரிசுகள் மட்டும் அதே கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
லட்ச்சவ்வாவும் அவரது கணவர் வேதிர முத்தையாவும் ஓட்டு வீட்டில் 40 வருடங்களாக தங்கள் பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்துவந்தனர். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதால் இருவருக்கும் மானிய விலையில் அரிசி கிடைத்துள்ளது. லட்ச்சவ்வா அரசிடம் இருந்து ரூ.1000 ஓய்வூதியம் பெற்றுவந்தார். இரண்டு மகன்களும் அவ்வப்போது இயன்ற உதவியை செய்துள்ளனர்.
இப்படியே காலத்தை இருவரும் நகர்த்திவந்தனர். ஆனால், சமீப காலமாக வயோதிக பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல் இருவரும் தவித்துவந்துள்ளனர். ஒரே கிராமத்தில் இருந்தும் லட்சவாவின் மருமகள்கள் எட்டிக்கூட பார்ப்பதில்லை.
இந்நிலையில், சிறிது நாட்களுக்கு முன்னர், லட்ச்சவா படுத்தபடுக்கையாகிவிட்டார். அவரால் எங்கும் நகர முடியவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட துணை தேவைப்பட்டது.
வயோதிகம் காரணமாக முத்தையாவால் லட்ச்சவ்வாவை சரியாக பார்த்துக்கொள்ள இயலவில்லை. இத்தகைய சூழலியே இருவரும் விஷமருந்தி உயிர் துறந்தனர். மகன்கள் இருவரும் இறுதி சடங்கை செய்தனர்.
இதுகுறித்து, அக்கம்பக்கத்தினர் கூறும்போது. "இருவரும் படுத்தப்படுக்கை ஆகிவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி இந்த முடிவை எடுத்திருக்கலாம்" என்றனர்.
"லட்சவாவின் மகன்களை இதற்கு குறை கூற முடியாது ஏனென்றால், முடிந்த அளவிற்கு பெற்றோரின் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்தார்கள்" என்று அந்த ஊர் தலைவர் கூறினார்.