இந்தியா

உத்தராகண்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 16 பேர் உயிரிழப்பு: 6 பேருக்கு தீக்காயம்

செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் டிரான்ஸ்பார்மர் (மின் மாற்றி) வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம், அலக்நந்தா ஆற்றங்கரையில் நாம்னே கங்கே நீர் மின்சாரத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் நேற்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் மின்மாற்றியுடன் இணைக்கப்பட்டு இருந்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 16 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 5 ஊர்க்காவல் படை வீரர்கள் ஆகியோர் அடங்குவர். பலர் காயமடைந்தனர். காயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சம்பவம் பற்றி குறித்து அறிந்ததும் உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உடனடியாக காயமடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சையை வழங்குமாறு உத்தரவிட்டார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதலை அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முகாமிட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை என்று அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT