இந்தியா

புரி ஜெகந்நாதர் கோயில் சொத்து எவ்வளவு?: பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புவனேஷ்வர்: புரி ஜெகந்நாதர் கோயில் சட்டம் 1955-ன்படி கருவூலத்தில் உள்ள சொத்துகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பிட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இந்த விதிகள் 1926 மற்றும் 1978-ம் ஆண்டுகளில் மட்டுமே பின்பற்றப்பட்டன.

அதன்பிறகு, 45 ஆண்டுகளாக புரி ஜெகந்நாதரின் சொத்துகள் குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இதனிடையே, புரி ஜெகந்நாதருக்கு சொந்தமான சொத்துகளில் தொடர்ந்து வரும் மர்மத்தை கண்டறிய கருவூலக பெட்டகத்தை திறக்க கோரி ஒடிசா உயர்நீதிமன்றத்தில் ஜூன் 30-ம் தேதி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அரசுக்கு சொந்தமான ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயத்தின் நிர்வாகம் இதுகுறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

தற்போதைய நிலையில், ஜெகந்நாத ஆலய வங்கி கணக்குகளில் ரூ.600 கோடி அளவுக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 1978-ன் மதிப்பீட்டின்படி 128 கிலோ தங்கம், 221 கிலோ வெள்ளி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர, புரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு சொந்தமாக ஒடிசாவில் 60,426 ஏக்கர் நிலமும், ஏனைய ஆறு மாநிலங்களில் 395.2 ஏக்கர் நிலமும் உள்ளன.

SCROLL FOR NEXT