மேற்கு வங்க மாநிலம் பங்க்குரா நகரில், இரண்டு சரக்கு ரயில்கள் நேற்று காலை மோதிக் கொண்டதில் ரயில் இன்ஜின் மற்றும் 12 பெட்டிகள் சேதமடைந்தன. படம்: பிடிஐ 
இந்தியா

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து ஏற்பட்ட ஒரு மாதத்துக்குள் மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் மோதல்

செய்திப்பிரிவு

பங்க்குரா: மேற்குவங்க மாநிலத்தின் பங்க்குரா மாவட்டத்தில் உள்ள ஆண்டா ரயில் நிலையத்தில், இரண்டு சரக்கு ரயில்கள் நேற்று அதிகாலை மோதிக் கொண்டன. இதில் 12 சரக்கு பெட்டிகள் தடம் புரண்டன.

ஒடிசா மாநிலத்தின் பாலசூர் பகுதியில் கடந்த 2-ம் தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மற்ற இரண்டு ரயில்கள் மீது மோதிய விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர் 1,000 பேர் காயம் அடைந்தனர். அதன்பின் கடந்த 5-ம் தேதி அசாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத்தில் ஆளில்லாத ரயில்வே கிராஸிங்கில் வாகனம் மீது ஒரு ரயில் மோதியது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து ஏற்பட்ட ஒரு மாதத்துக்குள், தற்போது மேற்கு வங்கத்தில் இரண்டு சரக்கு ரயில் மோதிய சம்பவம் நடந்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் பங்க்குரா நகரில் ஆண்டா ரயில் நிலையம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 4 மணியளவில், ஒரு பாதையில் சரக்கு ரயில் ஒன்று காலியாக நின்றிருந்தது. அதன் மீது, அதே பாதையில் பின்னால் இருந்து வந்த மற்றொரு காலி சரக்கு ரயில் மோதியது. இதில் ரயில் இன்ஜின் கவிழ்ந்து, 12 சரக்கு ரயில் பெட்டிகளும் தடம் புரண்டன. இந்த விபத்தில் ரயில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. உயிரிழப்பு சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘மோதிக் கொண்ட இரண்டு சரக்கு ரயில்களும் காலியாக இருந்த ரயில்கள். இந்த ரயில்கள் மோதிக் கொண்டதற்கான காரணம் விசாரணைக்கு பின்பே தெரியவரும். இந்த விபத்தால் காரக்பூர் - பங்க்குரா - அத்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதை கூடிய விரைவில் சீரமைக்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்’’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT