புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் தோடா பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
பூமிக்கு அடியில் 6 கி.மீ., தொலைவில் உருவான இந்த நிலநடுக்கமானது தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நில அதிர்வு அறிவியல் ஆய்வு மையம் அதன் ட்விட்டர் பக்கத்தில், "5.4 ரிக்டர் அளவில், ஜூன் 13-ம் தேதி பிற்பகல் 1.30 அளவில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் உணரப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இதேபோல், பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காலையில் மியான்மரில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஜம்மு காஷ்மீரில் இன்று (ஜூன் 13) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பள்ளிக் குழந்தைகள் அச்சமடைந்தனர். வியாபாரிகள் கடைகளை விட்டு வெளியேறினர். கடந்த வாரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் அதிகமாக இருந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் கூறியதாக தனியார் செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.