புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள ஜாவிட்ஸ் மையத்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது: பிரதமர் மோடியும் பாரதிய ஜனதா கட்சியினரும் எதிர்காலத்தைப் பற்றி பேசுவதில்லை. தங்களுடைய தோல்வியை மறைக்க கடந்த கால ஆட்சியாளர்கள் மீது குறை கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் ரயில் விபத்து நடந்தது. அப்போது, ரயில் விபத்து ஏற்பட்டதற்கு பிரிட்டிஷாரின் தவறுதான் காரணம் என காங்கிரஸார் கூறவில்லை. அப்போதைய ரயில்வே அமைச்சர், இது என்னுடைய பொறுப்புதான் எனக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் (பிரதமர் மோடி) பின்புறம் வரும் வாகனங்களைப் பார்க்க உதவும் கண்ணாடியைப் பார்த்து இந்திய காரை ஓட்ட முயற்சிக்கிறார். பின்னர் அந்தக் கார் ஏன் விபத்தில் சிக்கியது என்பதையும் ஏன் முன்னோக்கி செல்லவில்லை என்பதையும் அவர் புரிந்துகொள்ளவில்லை. பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒரே கருத்தியலைக் கொண்டுள்ளன. பிரதமராக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் எதிர்காலத்தைப் பற்றி பேசுவதே இல்லை. அவர்கள் கடந்த காலங்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.