சுற்றுச்சூழல்

குவாரிகளை அரசே எடுத்து நடத்த வேண்டும்: இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு குவாரிகளை குத்தகைக்கு விடாமல், தானே எடுத்து நடத்த வேண்டும் என, இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில், ரா.சா.முகிலன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள 34 ஆறுகள், தற்போது, ஆறு என்ற தன்மையை இழந்து உயிரற்ற நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

இதற்கு மணல் குவாரிகளே முக்கிய காரணம். தமிழகத்தின் மணல் தேவையை சரி செய்ய வெளிநாட்டில் இருந்து மாதம் 15 லட்சம் டன் இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்ய வேண்டும். ஏற்கனவே, வெளி நாடுகளில் இருந்து மாதம் 5 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்ய அரசாணைகள் போடப்பட்டன. ஆனால், அவை முறையாக நடைமுறைப் படுத்தவில்லை.

வெளிநாட்டில் இருந்து மாதம் 15 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்தால், தமிழகத்தின் தினசரி மணல் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். இந்த நடை முறையில் அரசுக்கு நேரடியாக முழு வருமானமும் கிடைக்கும். யாரும் இடையில் ஒரு பிடி மணலை கூட எடுக்க முடியாது.

மேலும், தமிழகத்தில் தற்போது 2 ஆயிரம் குவாரிகள் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. ஆனால், அனுமதி பெறாமலும், அனுமதி காலம் முடிந்தும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்கி வருகின்றன. அனுமதி காலம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து அந்த குவாரிகளில் வளங்கள் எடுக்கப் படுகின்றன. அனுமதி காலம் முடிந்த குவாரிகளில் டிஜிட் டல் ட்ரோன் சர்வே நடத்தி, சட்ட விரோதமாக எடுக்கப்பட்ட வளங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும், இந்த ட்ரோன் சர்வே தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது. அதில் பல்வேறு முறை கேடுகள் நடைபெறுகின்றன. எனவே, அரசே இந்த ட்ரோன் சர்வே நடத்த வேண்டும்.

மேலும், தமிழக அரசு குவாரிகளை குத்தகைக்கு விடாமல், தானே எடுத்து நடத்த வேண்டும். குவாரிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தமிழக அரசுக்கு தனக்கு இருக்கும் கடனை எளிதாக அடைக்க முடியும். விரைவில் அமைச்சரை சந்தித்து இந்த கோரிக்கைகளை வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT