கோப்புப் படம்
மதுரை: காற்று மாசைக் குறைக்கும் நோக்கில் மின்னணு வாகனங்கள் (இவி) பயன்பாட்டை அதிகரித்து மின் வாகன நகராக மாறும் நகரங்களின் பட்டியலில் தமிழக அரசு மதுரையைத் தேர்வு செய்துள்ளது. இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல மாநகராட்சி ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டைக் குறைத்து 2030-க்குள் மின்னணு வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் மானியத் திட்டம், பழைய வாகனங்களை மின்னணு வாகனங்களாக மாற்ற ஊக்கத்தொகை மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதைத் தடுத்து, எரிபொருள் இறக்குமதியைக் குறைப்பதே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. காற்று மாசைக் குறைக்க மின்னணு வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை தமிழக அரசு மக்களிடம் கொண்டு செல்ல ‘தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023’-ஐ செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
அதில், மதுரை உட்பட 6 முக்கிய நகரங்களைத் தேர்வு செய்து அந்த நகரங்களில் முதற்கட்டமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாநகராட்சி ஆணையர்கள் தலைமையில் 9 அரசுத் துறைகளைக் கொண்ட குழுவினரை உறுப்பி னர்களாக நியமித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு 2030-க்குள் 30 சதவீத மின்னணுப் பேருந்துகளை இலக்காகக் கொண்டுள்ளது.
மக்களை மின்னணு வாகனங்களைப் பயன்படுத்த வைக்க விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்வது, இத்துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் முக்கிய நோக்கமாகும். இந்த அடிப்படையில் மதுரை, சென்னை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களை மின் வாகன நகரங்களாக மேம்படுத்தும் பணிக்காக பல்துறை அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்டு மின் வாகன வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இத்திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல மாநகராட்சி ஆணையர் சித்ரா தலைமையில் 9 உறுப்பினர் களைக் கொண்ட, மின்சார வாகனச் செயல்பாடுகளை கவனிக்கும் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் ஆணையர் சித்ரா ஒருங்கிணைப்பு அலுவலராகவும், அவருக்குக் கீழ் உறுப்பினர் களாக மதுரை ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சிக் குழுமம், மாவட்டப் போக்குவரத்துத் துறை, தமிழ்நாடு சுற்றுலாக் கழகம், தமிழ்நாடு மின் வாரியம், போக்குவரத்துக் காவல்துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, மாவட்ட நகர ஊரமைப்புத் துறையினர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மாநகராட்சி ஆணையர் தலைமையில் இக்குழுவினர் பொதுமக்கள் மத்தியில் மின்னணு வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கத் தேவையான விழிப்புணர்வு நடவடிக் கைகளை மேற்கொள்ள வார்கள், என்று கூறினர்.