படம்: நா.தங்கரத்தினம்
படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விளாச்சேரியில் விதவிதமான பசுமை விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. அதில் கருப்பு பட பாணியிலான சிலைகள் உட்பட புதிய ரக சிலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் மண் பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்கள் பருவத்துக்கேற்ப மண்பாண்டப் பொருட்களை தயார் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு செப்.14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு விளாச்சேரியில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளை விக்காத களிமண்ணாலான சிலை கள் தயார் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து மண்பாண்டக் கலைஞர் பி.விஜயகுமார் (35) கூறுகையில், விளாச்சேரி கண்மாய் பகுதியில் கிடைக்கும் களிமண், ஆற்று மணல், யானை சாணம் கலந்து சிலைகளை தயார் செய்கிறோம்.
குடும்பத்தினருடன் சேர்ந்து வேலை பார்க்கிறேன். ஒரு சிலை செய்து முடிக்க 10 நாட்களாகும். 3 அடியிலிருந்து 8 அடி வரையிலான சிலைகளை செய்கிறோம். ஒரு அடிக்கு ரூ.3,500 கூலி வாங்குகிறோம்.
நடப்பாண்டில் காமதேனு வாகனத்தில் விநாயகர், நந்திகேசுவரருடன் விநாயகர், சேஷ வாகனத்தில் விநாயகர், கருட வாகனத்தில், குதிரை வாகனத்தில் எழுந்தருளும் விநாயகர் சிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
அதேபோல், தற்போது கருப்பு பட பாணியில் கையில் அரிவாளுடன் கூடிய விநாயகர் சிலையை ஒருவர் விரும்பிக்கேட்டதால் செய்துள்ளோம். கடந்த ஆண்டு 32 சிலைகளை தயார் செய்தோம். இந்த ஆண்டு, இதுவரை 17 சிலைகள்தான் செய்துள்ளோம்.
நீர்நிலைகளை மாசுபடுத்தும் ரசாயன கலவையால் தயாரிக்கப்படும் சிலைகளால், பசுமை சிலை தயாரிப்பு தொழில் நலிவடைந்து வருகிறது. ரசாயனப் பொருட்களை பயன் படுத்தி சிலைகளை தயார் செய்வதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்று கூறினார்.