போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது பிட்டு தபாஹி என்ற இளைஞர் ஒருவர், பல மாதங்களாக மாசடைந்த நதியை தனியாளாகச் சுத்தப்படுத்தி வந்த சம்பவம், சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அவரது இந்த அர்ப்பணிப்பைப் பாராட்டி, நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை நிர்வாகி ஒருவர், தனது நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற நேரடி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுரேந்திர சிங் சவுத்ரி (இணையத்தில் 'பிட்டு தபாஹி’ என்று அழைக்கப்படுபவர்), அங்குள்ள அஜ்னார் நதியில் சேர்ந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளைத் தொடர்ந்து அகற்றி வந்துள்ளார். எந்தவொரு ஆதரவோ அல்லது நிதியுதவியோ இன்றி, தனது சொந்தச் செலவிலேயே துப்புரவுப் பொருட்களை வாங்கி அவர் இந்தப் பணியைச் செய்து வந்துள்ளார்.
அவர் நதியைச் சுத்தப்படுத்துவதற்கு முன்பும், சுத்தப்படுத்திய பின்பும் எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அப்புகைப்படங்கள் வைரலான நிலையில், நெதர்லாந்தைச் சேர்ந்த 'தி ஓஷன் கிளீன்அப்' என்ற சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான போயன் ஸ்லாட் என்பவரின் கவனத்தை ஈர்த்தன.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட பதிவில், போயன் ஸ்லாட் நேரடியாகக் பின்னூட்டமிட்டு, "எங்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள்" என அழைப்பு விடுத்துள்ளார். ஒரு தனிநபரின் தொடர் முயற்சியால் தொடங்கிய இந்த நதி சுத்திகரிப்புப் பணி, தற்போது அவரை உலக புகழ்பெற்ற சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பில் பணியாற்றும் வாய்ப்பை நோக்கி அழைத்துச் சென்றுள்ளது.