சுற்றுச்சூழல்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பட்டுப்போகும் தென்னை மரங்கள் - திருவாரூர் விவசாயிகள் வேதனை

செய்திப்பிரிவு

திருவாரூர்: வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தென்னை மரங்களில் காய்ப்பு குறைவதாகவும், சில மரங்கள் காய்ந்து பட்டுப்போய் வருவதாகவும் திருவாரூர் மாவட்ட தென்னை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, வடபாதிமங்கலம், பாரதிமூலங்குடி, கண்கொடுத்த வணிதம், கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாததால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்துள்ளது. மேலும், கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால்,கமலாபுரம், பாரதி மூலங்குடி, ஓகைபேரையூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் குருத்துடன் முற்றிலுமாக காய்ந்து, கருகிகீழே விழுந்து, மரம் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், தேங்காய் மகசூல் பெருமளவில் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து கமலாபுரம் விவசாயி ராஜேந்திரன் கூறியது: கடந்த கஜா புயலின்போது தென்னை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர், அதிலிருந்து மீண்டு வந்துள்ள நிலையில், தற்போதைய வெயிலின் தாக்கம் மற்றும் வறட்சியால் ஏற்பட்டுள்ள மகசூல் இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை ஈடுகட்ட உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT