மழைக்காடை

 
சுற்றுச்சூழல்

பண்ணவாடிக்கு வலசை வந்து தாயகம் திரும்பாத பறவைகள்!

பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

த.சக்திவேல்

மேட்டூர்: பண்ணவாடிக்கு வலசை வந்த மீசை ஆலா, மழைக்காடை பறவைகள் தாயகம் திரும்பாமல் இங்கேயே தங்கியுள்ளதால் பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அருகே பண்ண வாடிக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவைகள் அதிகளவில் வலசை வருகின்றன.

நீர்நிலை, உணவு வளம், பாதுகாப்பான வாழ்விடம் இருப்பதால், வலசைப் பறவைகள் இப்பகுதியில் சில மாதங்கள் தங்கி பின்னர் தங்கள் தாயகத்துக்கு திரும்புகின்றன.

அதேபோல மார்ச் முதல் ஜூன் மாதம் வரை உள்ளூர் பறவைகள் இப்பகுதியில் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் பண்ண வாடியில் வழக்கமாக வலசைப் பறவையாகக் காணப்படும் மீசை ஆலா, மழைக்காடை, சிற்றாலா ஆகியவை தொடர்ந்து தங்கியுள்ளன.

இதை சிறகுகள் மற்றும் இயற்கை ஆர்வலர் கழகத்தைச் சேர்ந்த செந்தில்குமார், ஷாஜன், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். இது பறவை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிறகுகள் மற்றும் இயற்கை ஆர்வலர் கழக அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: மீசை ஆலா பறவை வழக்கமாக ஏப்ரல் மாதத்துக்குள் தனது தாயகமான ஐரோப்பாவுக்கு திரும்பிச் சென்றுவிடும். ஆனால், ஜூலை மாதம் தொடங்கிய பின்னரும் ஒரு ஜோடி மீசை ஆலாக்கள் இப்பகுதியிலேயே காணப்படுகின்றன.

இந்தக் காலகட்டம் இனப்பெருக்கக் காலமாகும். இதன் காரணமாக, ஆண் பறவையின் இறகுகளும் உடலின் நிறமும் இனப்பெருக்கத் தோற்றத்துக்கு ஏற்ப மாறத் தொடங்கும்.

மீசை ஆலா

பண்ணவாடியில் பதிவான ஆண் மீசை ஆலாவும் முழுமையான கருமை நிற கவர்ச்சிகரமான இறகுகளின் இனப்பெருக்க இறகுத் தோற்றத்துடன் காணப்பட்டது. மழைக்காடை வடஇந்தியப் பகுதிகளில் வாழும் பறவையாக இருந்தாலும், பருவநிலை மாற்றத்திற்கேற்ப தமிழகத்துக்கு வலசை வருகிறது.

இந்த ஆண்டு வழக்கத்தைவிட முன்னதா கவே ஜூலை மாதத்தில் பண்ண வாடியில் தென்பட்டுள்ளது. ஜனவரி மாதம் வரை இப்பகுதியில் தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக கடற்கரையோரப் பகுதிகளில் வாழக்கூடிய சிற்றாலா பறவையும், கடந்த டிசம்பர் மாதம் முதல் இன்று வரை தொடர்ந்து பண்ணவாடி பகுதியில் காணப்படுகிறது.

அரிய மற்றும் வலசைப் பறவைகள் நீண்ட காலம் தங்கி வாழ்வதற்கு ஏற்ற சூழல், போதுமான உணவு வளம் மற்றும் பாதுகாப்பான வாழ்விடம் ஆகியவை உள்ளதாக பண்ணவாடி திகழ்கிறது, என்றனர்.

SCROLL FOR NEXT