செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அஞ்சூர் ஏரி மற்றும் மறைமலைநகர் பகுதி ஏரிகளில் உள்ள பறவைகள் குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள புகைப்பட கலைஞர்கள்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், வனத்துறை சார்பில், சுமார் 22 இடங்களில் நீர், நில பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில், 84 வகையான பறவை இனங்களும், 1,000-க்கும் மேற்பட்ட பறவைகளும் அடையாளம் காணப்பட்டது.
பறவைகள், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினமாகும். எனவே, பறவை இனத்தையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்க, தமிழக அரசு மாநிலம் முழுவதும், 2,000-க்கும் மேற்பட்ட இடங்களில் (ஈர நிலங்கள் மற்றும் நிலப்பகுதிகள்) மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பை 2023-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருகிறது.
அதன்படி, வனத்துறை சார்பில், இந்த ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு டிச. 27, 28 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில், 22 இடங்களில் நீர், நில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இதில் வனத்துறையினர் தன்னார்வ அமைப்பினர், கல்லூரி மாணவர்கள், தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட, 22 ஈர நில பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 84 வகையான பறவை இனங்களும், 1,000-க்கும் மேற்பட்ட பறவைகளும் அடையாளம் காணப்பட்டது. 2-ம் கட்டமாக நிலப்பரப்புகளில் கணக்கெடுப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என, வனத்துறையினர் தெரிவித்தனர்.