புதுடெல்லி: நாட்டின் மின் உற்பத்தியில் 75 சதவீதம் அனல் மின் நிலையம் மூலம் நிகழ்கிறது.
இதற்கு ஆண்டுக்கு சராசரியாக 892 மில்லியன் டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் 220 மில்லியன் டன் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
நிலக்கரி பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாவதைக் கருத்தில் கொண்டு, அடுத்த 4 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் உள்ள 30 நிலக்கரிச் சுரங்கங்கள் மூடப்படும் என்று மத்திய நிலக்கரித் துறை செயலர் அமிர்த் லால் மீனா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “இந்தியாவில் நிலக்கரி தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு நிலக்கரி சுரங்கத்தை குறைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
நிலக்கரிச் சுரங்கங்கள் மூடப்படுவதால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் சுற்றுச்சூழல் மேம்படும். மூடப்படும் சுரங்கப் பகுதிகளில் காடுகள், நீர்நிலைகள் உருவாக்கப்படும். வேளாண்மை செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்’’ என்றார்.