பிளாஸ்டிக் | கோப்புப் படம் 
சுற்றுச்சூழல்

பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்தான் மறுசுழற்சிக்கு பொறுப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

செய்திப்பிரிவு

சென்னை: பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்தான் அதை மறுசுழற்சி செய்வதற்கும் பொறுப்பு என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி அல்லது விற்பனை செய்யும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பேக்கேஜிங் (packaging) பொருட்களை திரும்ப பெறுவதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பின் (Extended Producers Responsibility) கீழ் பொறுப்பாளர்கள் ஆவார்கள். மேலும், அவர்கள் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் பேக்கேஜிங் (packaging) பொருட்களின் முழு ஆயுள் சுழற்சிக்கும் பொறுப்பாவார்கள்.

இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், 16.02.2022 தேதியிட்ட அறிவிக்கையின்படி பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (திருத்தம்) விதிகள், 2022 இன் அட்டவணை II- ல் பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்களுக்கான நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR)” குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இத்திருத்தப்பட்ட விதிகளின்படி, பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கவும், தரம் பிரித்து மறுசுழற்சி மற்றும் சிமென்ட் தொழிற்சாலைகளில் இணை எரிபொருளாக உபயோகிக்கவும் அல்லது பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்வதன் மூலம் பிளாஸ்டிக் மேலாண்மையில் நிலைத்தன்மை மற்றும் சுழற்சி (circular) பொருளாதாரத்தையும் அடைய முடியும்.

பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், வியாபார தர அடையாள (Brand Owners) உரிமையாளர்கள், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், மாநில மாசு கட்டுப்பாடு வாரியம், மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் கழிவுகளை கையாள்பவர்கள் ஆகியோருக்கு நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பின் கீழ் (EPR) திறம்படச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தடையும், ஏனைய பிளாஸ்டிக் பொருட்களுக்கான உற்பத்தியாளர் பொறுப்புக்கான வழிகாட்டுதல் விதிகளும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பதற்கான முக்கியமான படிகள் ஆகும்.

இந்த விதிகளுக்கு இணங்க, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வியாபார தர அடையாள (Brand Owners) உரிமையாளர்கள் [Producers, Importers & Brand Owners (PIBOs)] மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கையாள்பவர்கள் [Plastic Waste Processors (PWPs)] ஆகியோர் பதிவு செய்து EPR பொறுப்புகளை திறம்படவும், வெளிப்படைத்தன்மையுடனும் நிறைவேற்றும் பொருட்டு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் ஒரு பிரத்யேகமான இணைய தளத்தை (https://eprplastic.cpcb.gov.in/) உருவாக்கியுள்ளது.

இதன்படி, அனைத்து உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், வியாபார தர அடையாள (Brand Owners) உரிமையாளர்கள் (PIBOs) மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கையாள்பவர்கள் (பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி, சிமெண்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளுக்கான இணை செயலாக்கம், கழிவில் இருந்து ஆற்றல் உருவாக்கம் செய்யும் ஆலைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவிலிருந்து எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலைகள்) ஆகியோர் இந்திய அரசின் சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால், அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கவனத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பேக்கேஜிங்களுக்கான (packaging) நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புக்கான (EPR) சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் EPR பதிவை திறம்பட செயல்படுத்துவதற்காக அத்தகைய செயல்பாடுகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிளாஸ்டிக் "EPR மையம்" (Plastic EPR Cell) ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த EPR மையமானது அனைத்து வார நாட்களிலும் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 9500076438 என்ற பதிவு செய்யப்பட்ட அலைபேசி (mobile) எண்ணில் செயல்படும். பிளாஸ்டிக் பேக்கேஜிங் (packaging) பொருட்களுக்கான EPR சான்றிதழ் பெற வேண்டிய அனைத்து பதிவாளர்களும், EPR இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பான உதவி, வழிமுறைகள், மற்றும் தகவல்களைப் பெற மேற்கூறியுள்ள தொடர்பு எண்ணிலும் pwmsec@tnpcb.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT